என்னை அறிந்தால்.....(ஒரு இன்ஸ்டிங்க்ட் தொடர்)
‘அது,இது,எது’ என எது
நாம் பற்றி பேசினாலும் (நீங்கள் விஜய் டி..வி.யை மறந்து விடக்கடவது)
அது எப்போதும் பொது.
ஆனால்,தன்னைப்பற்றி மட்டுமே பேசுவது சுயநலச்சூது.
கொஞ்சம் என்னை பற்றியும், கொஞ்சம் உங்களைப்பற்றியும்
பேசுவதுதானே இருவருக்கும் நியாயபோதை தரும்
மது?
பேசுவோமா?
அடிபட்டு ஆஸ்பத்திரி மீண்ட கதாநாயகம் முதல், வாழ்வியல்
துன்பங்களில் அடிபடாது
பரம்பொருளை வேண்ட கிளம்பிய பரமசாதுக்கள் வரை,
கேட்டுக்கிளம்பிய கேள்வி இதுதானே?
“நான் யார், இப்ப எங்கிருக்கேன்?”
இந்தக்கேள்விக்கு விடை தேடி ‘இன்டெர்ஸ்டெல்லர்’ பாணியில்
‘கருந்துளை’ (அதாங்க பிளாக் ஹோல்) வழியாக இன்னொரு கிரகம் நுழைய வேன்டியதில்லை.
ஆனால், நம்முள் இருந்தும் இருக்காத ஒரு உள்துளைக்கிரகம் தேடவேண்டும்.
அதுதானே வள்ளலார் தொடங்கி, நமக்கு மாரல்சயின்ஸ் பாடம் சொன்ன
வாத்தியார் வரை தேடிச்சலித்த விஷயம்?
ஆனால் இங்கே 916 கேரண்டியாய் ஒரு தகவல்.
இது சாமி சத்தியமாய் ஆன்மீகத்தேடல் அல்ல. அதற்கான சப்ளை இந்த குரூடாயில்
பரம்பரைக்கு தாராளமாகவே கிடைக்கிறது.
நமது இந்துக்கலாச்சாரத்தில் அல்லது
இந்தியக்கலாச்சாரத்தில் ஆன்மீகச் சர்பத்துக்கு சாமியார்களின் சர்க்கரை போதுமானதாக
இருந்தாலும், கொஞ்சம் பகுத்தறிவுச்சாயம் சேர்க்கும்போது அதன் தித்திப்புச்சுவை
கொஞ்சம் தூக்கலாகத்தானே இருக்கிறது ?
சரி , இது ஆன்மிகம் தேடும் இடம் இல்லை. வேறு எதாம்?
சுயம் தேடும் சுகவாசிகளுக்கு இது ஆண்மை பாதாம்.
சுயம் தேடுவோரை எப்படி சுக வாசி எனலாம்? இதென்ன
‘சித்தவைத்திய சிகாமணி’ தரும் சிட்டுக்குருவி லேகியமா? இல்லைதான்.
தன்னில் தன்னைத்தேடி, சமுதாய சுகம் அடைவோரே இன்றைக்கு
நிச்சய சுகவாசிகள். ஏனெனில் அவர்களே இந்த சமூகக்கட்டான குடும்பத்தை சரியாய் நடத்த
முடிகின்ற குடும்பஸ்தர்கள்.
ஆகவே, நாம் இங்கே பேசப்போகும் விஷயம் சமூகமும், அதில்
சாகாவரம் பெற்ற சாமானியனும்தான்.
ஹோம் அப்ளையன்ஸ்
நிறுவனத்தின் ஒரு ‘சேல்ஸ் & மார்க்கெடிங்‘ பயிற்சிப்பட்டறையில் பங்கேற்ற
அந்நிறுவனத்தின் பணியாளர்களிடம் பயிற்சியாளன் என்ற முறையில் ஒரு கேள்வி கேட்டேன்.
“திடீரென்று கடவுள் தோன்றினால் , அவரிடம் ஒரு வரம் என்ன
கேட்பீர்கள்?” என்று கேட்டேன். கேள்வி விதிமுறைகளுக்கு உட்பட்டது. அது “ பதிலை
‘டக்’குனு சொல்லனும்” .
(தொடரும்)
Comments