அப்பிச்சி !


பொதுவாக நம்மை பெத்தவங்களைப் பெத்த மூத்தோரை ‘தாத்தாபட்டி’ என்று குறிப்பிடுகிறோம். அடையாளம் தெரியாத வயாசாளிகளைத்தான் அப்படிச் சொல்லலாம்.
அம்மாவை பெற்ற தாத்தாவை ‘அப்பிச்சி’ என்று அழைப்பதுதான் எங்கள் (கொங்கு நாட்டு கைக்கோளர்கள்) வழமை. பாட்டியை ‘அம்மாயி’.

அப்பா தாத்தாவுக்கு ‘அப்பாரு’ என்று அழைப்பு மொழி.அவருக்கு ஜோடியாய் ‘ஆயா’.
அந்தக் காலம் என்ற மகுடேஷ்வரனின் கவிதை படித்த பின்னர் எனக்கு அந்தக் காலம் ஞாபகம் வந்துவிட்டது.

அப்பிச்சி ஒரு அலாதியான கேரக்டர்.

நல்ல வளர்த்தி. ஆறடிக்கு பக்கமாக இருக்கணும். நாந்தான் முதல் பேரப்பையன். எனது அம்மாதான் முதல் பெண் எங்க அப்பிச்சிக்கு.
அப்புறம் பெரிய மாமா.

பின்னர் இன்னொரு சித்தி. அதற்கு பிறகு சின்ன மாமா. அப்புறமாய் சொல்லி வைத்தார்போல நான்கு சித்திகள். மொத்தம் எட்டு உருப்படிகள். பிறந்ததும் இறந்து போனவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், எட்டுபேரில் இப்போது (2013 ) இரண்டாவது சித்தி இறந்து 10 வருடமும்,சின்ன மாமா இறந்து ஒரு வருடமும் ஆகி விட்டது.

முதல் மாமாவின் கல்யாணத்திலிருந்தே எனக்கு ஞாபகம் இருக்கிறது.

அப்பிச்சியை பற்றி நினைக்கும் போது, அவரது உயர்ந்த உருவம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. பலசாலியும் கூட. ஈரோட்டிலிருந்து தறிக்கு வேண்டிய நூல்கட்டுகளை தனியோருவராகவே எடுத்து பஸ் ஏற்றி, கவுந்தப்பாடி வந்து, பஸ் மாற்றியோ, தலைச்சுமையாகவோ மேட்டுப்பாளையம் (கவுந்தப்பாடியிலிருந்து பெருந்தலையூர் செல்லும் வ்ழியிலுள்ளது) கொண்டுவந்து ஆலமர (ஆலாமரம் என அழைப்பதும் வழக்கம்) நிறுத்தம்வரைக்கும் சேர்த்துவிட்டு தனியாக வீடு வந்து விடுவார்.
“போங்களா, போயி ஆலாமரத்துல நூல் கிடக்கு, எடுத்துட்டு வாங்க” என்று வீட்டில் உட்கார்ந்து விடுவார். 

உடனே அவருக்கு பழைய சோத்து தண்ணீரோ, கம்பு தண்ணீரோ ஒரு சொம்பில் கொடுக்கனும். இது அம்மாயி வேலை.

பாவுக்கும், ஊடைக்குமாய் சேர்த்து கலர் கலராய் நூல் கட்டுகள் அங்கே கிடக்கும். மாமாக்கள் அரசு உத்தியோகம் கிடைத்து சென்றுவிட்டதால் வீட்டில் இருப்பவர்கள் சித்திமார்கள்தான்.

ஆம்பிளைகள் மாதிரி அந்த நூல்கட்டுகளை சுமந்து வருவார்கள் சித்திகள். நல்ல உழைப்பாளிகள். ஆனாலும் வசீகரமான முக அமைப்பு அத்தனை பேருக்குமே.

வீடும்,பள்ளியும் எங்களுக்கு ஈரோட்டில்தான் என்றாலும், ஒவ்வொரு கோடைக்கும் தவறாமல் இரண்டு தாத்தா-பாட்டி வீடுகளுக்கும் ஆஜராகி விடுவோம்.

விஷேச நாட்களில் இட்லி தயாராகி விட்டால், சட்னியோ, குழம்போ கொதிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ரெண்டு இட்லியை தட்டுகளில் போட்டு, கடலை எண்ணெய் ஒரு கரண்டி (ஸ்பூன் அல்ல, குழம்புக் கரண்டி) ஊற்றி , “தொட்டு சாப்பிடுங்க” என்பார். அந்தக் கடலை எண்ணெய் வாசமே சட்னி, சாம்பாரை தூக்கிச் சாப்பிடும். நாம் சாப்பிட மாட்டோமா என்ன?

“கொழந்த பசங்க, பசி தாங்க மாட்டாங்க...” என்பார்.
அவர் சாப்பிடுவதும் ஒரு காணத்தகுந்த காட்சியாகவே இருக்கும்.குளித்த பின்னர்தான் சாப்பிடுவார். குளிப்பதற்கு குளியலறையையெல்லாம் பயன்படுத்த மாட்டார். பெரிய வாசல். வாசலின் கடைசியில் தண்ணீர் தொட்டி. நீர் நிரம்பியிருக்கும் அதிலிருந்து மொண்டு நேரடியாக உடம்புக்கு ஊற்றிக்கொள்வார். கௌபீணம் (கோவணம்) தான் உடுத்தியிருப்பார் குளிக்கையில்.

உடம்பை நன்றாக தேய்த்து,தேய்த்து குளித்தபின்னர் கௌபீணத்தை உடுத்தியிருக்கும் வாக்கிலேயே ஒரு பிழி பிழிவார் பாருங்கள். இங்கே வலிக்கும். தலையை தன் விரல்களால் கோதுவார்.

அவ்வளவுதான் குளித்தாகிவிட்டது. புதிய கோவணமும், வேட்டியும் இடம் மாறும்.
அடுத்த காட்சி பூஜையறையில்.

நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமல், பழையது சாப்பிட்டது கிடையாது. சிவ பக்தர். மாசா மாசம் அமாவாசைகளில் திருச்செங்கோடு மலை ஏறி அர்த்தனாரீசுவரரை தரிசிக்காமல் இருந்ததில்லை.

ஆனாலும் உள்ளூர் பாட்டப்பசுவாமிகளிடம் பயம் அதிகம். என் அம்மா முதற்கொண்டு, சித்தி, மாமா வரை கல்யாணப் பொருத்தம் பார்க்கிற பொழுது, ஜாதகத்தை நம்பியதை விட, பாட்டய்யனிடம் வாக்கு கேட்டு, உத்தரவு ஆகிவிட்டால் காரியத்தில் இறங்கி விடுவார். யார் என்ன சொன்னாலும் காதில் போட்டுக் கொண்டதில்லை.

ஒருமுறை பள்ளிகோடை விடுப்பில் ஊருக்குப் போயிருந்தபோது, ‘பெருந்தலையூர் விஜயனில்’ ராபர்ட்-ராஜசேகரனின் ‘பாலைவனச் சோலை’ போட்டிருந்தார்கள். ஈரோட்டில் சக்கை போடுபோட்டதால், “அப்பிச்சி, படம் நல்லாருக்கும்.போலாமா?” என வினவ அவரும் தெரியாத்தனமாக படத்திற்கு வந்துவிட்டு ராத்திரி வீட்டில் வந்து அம்மாயி, மற்றும் சித்திகளிடம், “என்ன சினிமாப்படம் எடுக்கறனுங்க? பேசாம சும்மாவே உக்காந்திட்டு இருக்கானுக. ஒரு சண்டை இல்லை, ஆட்டம் பாட்டம் இல்லை........ஒரு பொம்பளை,அஞ்சி பசங்களாம்...படமாடா அது?”

சித்திகளுக்கோ சிரித்து மாளவில்லை

“இப்பிடித்தான்டா ஈரோட்டுல எல்லாம் கெட்டு அழியிறீங்க.....மூவேந்தர்ல ‘லவ-குசா’ போட்டிருக்கான். உங்களை மாதிரிதான் ரெண்டு பசங்க.போயி பாருங்க, மணி மணியா , அது பசங்க.......” உசுப்பேத்திவிட்டார்.

போய்ப்பார்த்துவிட்டு ராத்திரி....சாரி அதிகாலை ரெண்டரை மணிக்கு வீடு திரும்பினோம். 

Comments

Popular Posts