கவர்மெண்டு கண்டிஷனும், கமலஹாசன் கமெண்ட்டும்....


கமல்ஹாசன் சொன்னாலும் சொன்னார், ‘கவர்மெண்ட் சரியில்லை’ என. குனிதல் மற்றும் கும்பிடு போன்ற வேலைகளை விட்டுவிட்டு அதற்கு பதில் சொல்லியிருக்கிறார் அமைச்சர் ஓ.பி. 
இவர்தான் பொதுப்பணித்துறை அமைச்சர் என்பது பின்குறிப்பு.......அதுவும் நான்கு நாட்களுக்குப்பிறகு “ நீவிர் பெரிய நடிகர் என்பதால் கேட்டுக்கொண்டு சும்மாயிருக்க முடியாது” என ஏன் லேட்டாக எச்சரிக்கை பதில் விடுத்தார் என்பது சூரியனுக்கே வெளிச்சம். “சரி சும்மா இல்லாம என்னா பண்றதா உத்தேசம்?” என கமலாசன் நற்பணி இயக்கத்தினர் கேட்டால் அடுத்த ஆபரேசன் பற்றி பதில் எப்போது சொல்வார் என தெரியவில்லை.

ஆனால் பாருங்கள் கருப்பையா சொன்ன 40% கமிசனுக்கு இன்னும் பதில் சொல்லவில்லை. அப்படியானால் அதை ஏற்றுக்கொள்ளுகிறார் என அர்த்தமா எனத் தெரியவில்லை.

சரி.....
முதல் கட்ட மழை வெள்ளம் வந்து வற்றியபோது கூட எந்த அமைச்சரும் வரவில்லை.முதல்வரும் கட்டங்கடேசியில் வேனில் இருந்தபடியே (கோவன் கோவமாய் சொன்னமாதிரி – கார் கூட நனையாமல்) வேடிக்கை பார்த்தார் என்றால் கவர்மெண்ட் கரெக்டாக இயங்குகிறது எனக் கொள்ளலாமா?

இரண்டாம் கட்டமாக பெருமழை வந்தபிறகும், தன்னார்வ தொண்டர்கள், அமைப்புகள் களம் இறங்கிய பிறகும் வாளாவிருந்துவிட்டு எதிர்கட்சிகள் கேள்வி கேட்ட பின்னர் மழைக்காட்டை வானில் ‘வட்டமடித்து ரசித்துவிட்டு’ சென்றதுதான் கவர்மெண்ட் கரக்டாக இயங்குகிறது என கொள்ளலாமா?

நிவாரணப்பணிகளுக்காக பார்மலாக வெளியிடப்படும் அறிக்கையும், நிவாரண நிதி கேட்பும் அரசிடமிருந்து இன்றுவரை அறிவிக்கப்படாதது கவர்மெண்ட் கரெக்டாக இயங்குகிறது என்பதற்கான அருஞ்சொற்பொருளா?

பிரதமர் வருகிறார் என கேள்விப்பட்டு, அதன் பின் வானம் பார்த்து வட்டம் போட்டதுதான் உங்கள் பாஷயில் கவர்மெண்ட் கரெக்டாக இயங்குகிறது என அர்த்தமா?
அரசின் கையிலிருக்கும், பால் மற்றும் ரேஷன் பொருட்களை படு வேகமாக மக்களுக்கு இலவசமாக கொண்டு சேர்த்திருக்க வேண்டாமா.......இதான் கவர்மெண்ட் கரெக்டாக இயங்குகிறது என்பதற்கு கோனார் நோட்சு சொல்லும் விளக்கமா?

கர்னாடக அரசு அறிவித்த தொகையை வாங்கிவிட்டீகளா..... கவர்மெண்ட் கரெக்டாக இயங்குகிறது என்றால் அது இன்னேரம் தமிழக அரசின் கஜானாவுக்கு வந்திருக்கனுமே.....? நிறய்ய்ய இருக்கா நம்ம கஜானாவில்?

அட, கடலூரை விடுங்க, சென்னையின் இன்னும் சில பகுதிகள் கவனிக்கப்ப்பாடாமலேயே இருக்கிறதாமே... கவர்மெண்ட் கரெக்டாக இயங்குகிறதா?
கடலூருக்கு வரும் நிவாரணப்பொருட்கள் அடித்துப்பிடுங்கப்படுவதாகவும், தடுக்கப்பட்டு அதன் மீது அரசு சார்பாக....இல்லையில்லை கட்சி சார்பாக ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாகவும் (இது தமிழகமெங்கும் இப்போது நடக்கிறதாமே?) வருகிற தகவல்களுக்கு எதற்கு அ.தி.மு.க.வின் வெப்சைட்டில் புகார் எண் கொடுத்திருக்கிறார்கள்? கவர்மெண்ட் கரெக்டாக இயங்கவில்லை என்பதை கன்ஃபார்ம் பண்ணத்தானே?

ராணுவத்தினர் (கடற்படை) கொண்டுவந்த ‘பொருட்களை எப்படி , எந்த ஏரியாவில் கொடுப்பது எனப்து பற்றி முறையான கம்யூனிகேஷன் இல்லை’ என ராணுவ தளபதி அதிருப்தி பட்டிருப்பதில் கவர்மெண்ட் கரெக்டாக இயங்குகிறது என்பதன் முரண் தெரியவில்லையா?

எத்தனை தாசிலதார்கள், மணியகாரர்கள், ஆர்.டி.ஓ.க்கள் களத்தில் இருந்தனர். ? ‘சென்னை மட்டுமே சாட்சி, பாதிக்கப் பட்டவர்களைவிட தன்னார்வலர்கள் அதிகம்’ எனும் ராணுவ தளபதியின் தகவல் சொல்வது என்ன, கவர்மெண்ட் கரெக்டாக இயங்குகிறது என்பதையா?

எதிர்கட்சியனர் அறிவித்த பண உதவிகள் எத்தனை மணி நேரத்தில் பெறப்பட்டன? ஊடகங்களில் “உதவித்தொகை பெற அப்பாயிண்ட்மெண்ட் தரப்படவில்லை” என கம்ளியிண்ட் செய்தபிறகே நிதித்துறைசெயலர் சீனுக்கு வருகிறார் என்றால், க.வே.செ. என அர்த்தமா?

எப்போதும் போல இப்போதும் கூட கோர்ட் படி ஏறிய பிறகுதானே இலவசப் பேருந்து அறிவிக்கப்பட்டது? கவர்மெண்ட் கரெக்டாக இயங்குகிறது என்பதற்கு இத ஒரு சான்று போதுமே?

இவை அத்தனையுமே ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், பத்திரிக்கைகள், டி.வி.க்கள் என பல ஊடகங்களிலிருந்து எடுத்தாளப்பட்ட உண்மைகளே.

ஒரு சாதாரணன் சொல்ல முடியாததை, சொன்னால் அரசின் செவிட்டு காதுகளுக்கு எட்டாதததை நாங்கள் எப்போதும் கைதட்டுகிறவிதமாக எங்களின் திரை நாயகர்கள் பேசித்தான் கேட்கிறோம். என்ன செய்வது எங்களுக்கு  ‘வாக்கு’ இருக்கிற அளவுக்கு ‘வக்கு’ இல்லை.


அவர்கள்தான் சொல்வார்கள். அது எங்களின் குரல். எங்களுக்கு தேவை பதில் இல்லை. பணி. அதற்குத்தான் நாங்கள் இட்டோம் வாக்கு. இல்லையேல் அடுத்தமுறை உங்களுக்கு ஜனனாயக தூக்கு....அதாவது பதவியில் இருந்து...

Comments

Popular Posts